Thursday, April 21, 2011

சைவத்தின் சரிதம். 6

'அங்க ஸ்தல'
              
      தனித்த ஆன்மாக்களுக்கே உரிய பண்பு 'பக்தி' ஆகும். அது கடவுளை நோக்கியது இந்த நோக்கத்தின் வளர்ச்சியில் மூன்று படிகள் உண்டு. இதற்குத் தகுந்தபடி 'அங்க ஸ்தல' என்பதில், அதாவது தனித்த ஆன்மாக்களைப் பற்றியதில் மூன்று பிரிவுகள் உள்ளன. அவற்றுள் மிக உயர்ந்த பிரிவு யோகாங்க, அடுத்தது போகாங்க, மற்றயது தியாகாங்க. முதலாவது, ஒருவன் சிவத்துடன் ஒன்றுவதன் மூலம் பேரின்பம் பெறுதல்; இரண்டாவது அவன் சிவத்துடன் சேர்ந்து மகிழ்ச்சி அடைதல்; மூன்றாவது இந்த உலகம் தற்காலிகமானது அல்லது மாயையானது என்று விட்டு விடுதலை ஆதல். இதையே இன்னொரு விதமாகவும் சொல்லலாம்;
       முதலாவது காரணத்தில் உறுதிப்பாடும் ஆழ்ந்த உறக்க நிலையும் போன்றது; 
இரண்டாவது; நுன்னுடலும் உறக்கத்தில் கனவும் போன்றது;
மூன்றாவது; மொத்த உடலும் உறக்கம் நீங்கி எழுகின்ற நிலையும் போன்றது.
இங்குச் சொன்ன மூன்று அங்கங்களும் ஒவ்வொன்றும் மேலும் இருவகைப் பட்டிருக்கும்.யோகாங்க என்பது ஐக்கிய, சரண என இரண்டாகும்.
1 . இவ்வுலகம் முழுவதும் உண்மை இல்லை என உணர்ந்த ஒருவன் சிவத்துடன் சேர்ந்து மகிழ்ச்சியைப் பங்கிட்டுக் கொள்வது, ஐக்கிய என்னும் சமரசா பக்தி. இதில் கடவுளும் ஆன்மாவும் பேரின்ப அனுபவத்தில் ஒன்றி விடுகின்றனர்.
2 . சரண பக்தியில் ஒருவன் லிங்கம் அல்லது கடவுளையும், ஒருவனே துய்க்கும் தனி அனுபவம் இது. யோகாங்க என்பது பிராணலிங்கின், பிரசாதின் என இருவகைப்படும்.
3 . வாழ்க்கையின் மீதுள்ள பற்றினை விடுவித்து, அகங்ககாரத்தைத் துறந்து, மனம் முழுவதையும் லிங்க அல்லது கடவுள் மேல் செலுத்துதல் பிராணலிங்கின்.
4 .பிரசாதின் என்பது ஒருவன் தான் அனுபவிக்கும் அனைத்துப் பொருள்களையும் கடவுளுக்கு அர்ப்பணித்து அமைதியை (பிரசாத) நாடுவதால் கைவரப்பெறுதல் ஆகும். இறுதியான தியாகங்க என்பது மகேஸ்வர, பக்த என இரு பிரிவினதாகும். 
5 . ஒருவன் கடவுள் இருக்கிறார் என்று ஆழ்ந்த நம்பிக்கையும் உறுதியும் கொண்டு, அக்கடவுளான லிங்கத்துடன் ஒன்ற வேண்டும் என்னும் பிடிப்புடன் உண்மை, நல்லொழுக்கம், தூய விரதம் ஆகியவற்றைக் கடைப்பிடித்து வாழ்தல் மகேஸ்வர ஆகும். 
6 . பக்தன் ஆனவன் ஈர்க்கும் எல்லாப் பொருட்கள் மீதும் தன் மனத்தைச் செலுத்தாமல் பக்தியுடன் பூசனை புரிந்து உலக மக்களினின்றும் வேறுபட்ட வாழ்க்கை வாழ்வதே பக்த எனப்படுவது.

அடுத்து நாம் காண இருப்பது ஆன்ம விடுதலை.